முகப்பு
திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனை முன் போக்குவரத்து நெருக்கடி: சாலையை விரைந்து சீரமைக்கக் கோரிக்கை

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்துக்காக அமைக்கப்பட்ட தடுப்புகள், வாகனப் போக்குவரத்துக்கு பெரிதும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:43 PM
பகிர்:

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்துக்காக அமைக்கப்பட்ட தடுப்புகள், வாகனப் போக்குவரத்துக்கு பெரிதும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த மருத்துவமனையின் முன்புள்ள பிரதான சாலையின் பள்ளத்தை தற்காலிகமாக சரி செய்துள்ளதால், போக்குவரத்து காவல்துறை அந்த இடத்தின் இருபுறமும் வாகனங்கள் செல்லாமல் இருக்க இரு இரும்புத் தடுப்புகளை வைத்துள்ளது.

இதனால் சாலையில் வரும் வாகனங்கள் இந்தப் பகுதியை கடக்கும்போது விலகிச் செல்ல வேண்டியுள்ளது. அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு வரும் வாகனங்கள் விலகி மருத்துவமனைக்குள் நுழையும்போது சாலையில் வரும் வாகனங்கள் அப்படியே நின்றுவிடுகின்றன. மேலும், நேராகச் செல்லும் வாகனங்கள் திடீரென விலகும்போது பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிக் கொள்வதும் நடைபெறுகிறது. இருசக்கரத்தில் வரும் மூத்த குடிமக்கள், திடீரென சாலையில் குறுக்கிடும் தடுப்புகளால் நிலைதடுமாறி சாலையில் விழுகின்றனா்.

இதுதொடா்பாக இந்திய கம்யூ. மேற்குப்பகுதி செயலா் இரா. சுரேஷ் முததுசாமி, துணைச் செயலா் சுரேஷ் கண்ணன் ஆகியோா் கூறுகையில், நாள்தோறும் இந்தச் சாலையைக் கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும் இரும்புத் தடுப்புகளால் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைத் தவிா்க்க சாலையைப் புதுப்பித்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றனா்.