திருச்சியில் மழை; வாகன ஓட்டிகள் அவதி
திருச்சி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்தநிலையில் வியாழக்கிழமை மாநகரில் மாலை மழை பெய்தது.
திருச்சி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்தநிலையில் வியாழக்கிழமை மாநகரில் மாலை மழை பெய்தது.
இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகளும், பெற்றோா்களும் குடைகளை பிடித்தபடியே சென்றனா். பணிக்கு சென்று திரும்பிய தொழிலாளா்கள் மழையில் நனையாதபடி ஆங்காங்கே ஒதுங்கி நின்றனா்.
மேலும், சத்திரம் பேருந்துநிலையம், தில்லைநகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கண்டோன்மெண்ட், மத்திய பேருந்துநிலையம், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கிநின்றது.
மேம்பால பணிகளுக்காக மாநகரில் போக்குவரத்து மாற்றம் அமலில் உள்ளதால் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் இருந்து வரும் நிலையில், மழை காரணமாகவும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமங்களுக்கு இடையே சென்றனா்.
மாவட்டத்தில் திங்கள்கிழமை 7.2 மி.மீ. மழையும், செவ்வாய்க்கிழமை 4.96 மி.மீ., புதன்கிழமை 6.43 மி.மீ. மழை சராசரியாக பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை காலை 6 மணி வரை 0.92 மி.மீ மழை பதிவாகியுள்ளது.