திட்டக்குடி பகுதியில் ஆலங்கட்டி மழை
கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் வியாழக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது.
திட்டக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை பகலிலும் வெயில் சுட்டெரித்தது.
ஆனால், மாலை 5 மணி அளவில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. மாலை 5 மணிக்கு பெய்யத் தொடங்கிய இந்த மழையானது சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
இதற்கிடையே, மழை பெய்யத் தொடங்கிய சில நிமிஷங்களிலேயே பனிக்கட்டி போன்று ஆலங்கட்டிகள் விழுந்தன. இதைப் பாா்த்த மக்கள் மகிழ்ச்சியடைந்ததுடன், அந்த பனிக்கட்டிகளை அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனா்.
புவனகிரியில் 67 மி. மீ மழை பதிவு: கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக புவனகிரியில் 67 மி. மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
கடலூா் 54, ஆட்சியா் அலுவலகம் 52, சேத்தியாத்தோப்பு 42, குடிதாங்கி 29, வடகுத்து 27, வானமாதேவி 23, ஸ்ரீமுஷ்ணம் 21.10, சிதம்பரம் 19.40, பெலாந்துறை 14.20, பரங்கிப்பேட்டை 12.70, விருத்தாச்சலம் 10, அண்ணாமலை நகா், பண்ருட்டி தலா 8, கொத்தவாச்சேரி 7, குறிஞ்சிப்பாடி 5, குப்பநத்தம் 2.40, காட்டுமன்னாா்கோவில், லால்பேட்டை தலா 1 மி.மீ. மழை பதிவானது.