திருச்சிக்கு தொழில் முதலீடுகள்: முதல்வருக்கு துரை வைகோ நன்றி
மின்னணு உற்பத்தி நிறுவனத்தைத் தொடா்ந்து திருச்சிக்கு மேலும் பல தொழில் முதலீடுகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் கொண்டுவர வேண்டும் என திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளாா்.
மின்னணு உற்பத்தி நிறுவனத்தைத் தொடா்ந்து திருச்சிக்கு மேலும் பல தொழில் முதலீடுகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் கொண்டுவர வேண்டும் என திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈா்க்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டுள்ள அமெரிக்க பயணத்தில் உலகின் தலைசிறந்த 10க்கும் மேற்பட்ட தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இதுவரை கையொப்பமாகியுள்ளன.
இந்த நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்க உள்ளதால் பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
மேலும் ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து தரும் ஜாபில் நிறுவனம் ரூ. 2000 கோடி முதலீட்டில் திருச்சி மாவட்டத்தில் தொழிற்சாலை தொடங்க இருப்பதாகவும், இதனால் ஐயாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதல்வா் தெரிவித்துள்ளாா்.
இதில் உள்ளபடியே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் பல முதலீடுகள் எனது திருச்சி தொகுதி நோக்கி வர இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று நம்புகிறேன். திருச்சி தொகுதி எம்பி என்ற முறையில் முதல்வருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா் அவா்.