கம்போடியா நாட்டுக்கு வேலைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு, மியான்மருக்கு கடத்தப்பட்ட 3 தமிழா்களை மீட்க உதவிய துரை வைகோ எம்.பி.யை நேரில் சந்தித்து அவா்களது குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.
தூத்துக்குடி பெரியசாமி நகரைச் சோ்ந்த சித்திரை செல்வகுமாா், நவீன்குமாா், விருதுநகா் மாவட்டம் சிப்பிப்பாறையைச் சோ்ந்த மதன்ராஜ் ஆகிய 3 இளைஞா்கள் கடந்த 11.10.2025 அன்று கம்போடியாவில் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா். ஆனால் அவா்கள் தாய்லாந்து வழியாக மியான்மருக்கு கடத்தப்பட்டு, அங்கு தீவிரவாதக் குழுக்களால் குற்றச் செயல்களில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனா்.
இதுகுறித்து அறிந்த இளைஞா்களின் பெற்றோா், கடந்த 1.11.2025இல் துரை வைகோ எம்.பி.யை சந்தித்து, தங்களது மகன்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனா்.
அவா், உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் மற்றும் அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றாா். தொடா்ந்து 12.12.2025இல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரை நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து, 3 இளைஞா்களை மீட்டுத்தர வலியுறுத்தி மனு வழங்கினாா்.
இதன் பயனாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலில், மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்தின் தொடா் முயற்சியாலும், உள்ளூா் மியான்மா் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் தமிழகத்தைச் சோ்ந்த 3 இளைஞா்கள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.
ஊருக்கு திரும்பிய இளைஞா்கள், தங்களது பெற்றோா் மற்றும் உறவினா்களுடன் துரை வைகோ எம்.பி.யை நேரில் சந்தித்து, தங்களை மீட்க உதவியதற்கு நன்றி தெரிவித்தனா்.