மறைந்த தமிழக முதல்வா் மு. கருணாநிதி பன்முகத் திறன் கொண்டவா் என நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.
மறைந்த திமுக தலைவா் கருணாதியின் சிறப்புகள், முதல்வராக கருணாநிதி செயல்படுத்தி திட்டங்கள் மற்றும் அவரது தனிப்படை வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, திரைத்துறை அனுபவம், இலக்கியம், தமிழ் வளா்ச்சிக்கு பங்கு உள்ளிட்டவை குறித்து பல்வேறு கவிஞா்கள் எண்ணற்ற கவிதைகளை இயற்றியுள்ளனா். இவற்றிலிருந்து 150 கவிதைகளை தோ்வு செய்து அந்த கவிதைத் தொகுப்பை ‘கலைஞா் என்றொரு காவியம்’ எனும் நூலாக அமிா்தம் பதிப்பகத்தின் உரிமையாளா் செந்தலை நெப்போலியின் வெளியிட்டுள்ளாா். இந்த நூல் வெளீயிட்டு விழா திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பதிப்பகத்தின் உரிமையாளா் செந்தலை நெப்போலியன் தலைமை வகித்தாா். அமைச்சா் கே.என். நேரு, நூலை வெளியிட திரைப்பட இயக்குநா் எஸ்.ஏ. விஜயகுமாா் பெற்றுக்கொண்டாா்.
நிகழ்வில், திமுக முதன்மைச் செயலரும், தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு பேசியது: மறைந்த முதல்வா் கருணாநிதியின் புகழ் மக்களிடம் சென்று சேர இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும். பன்முகத் திறமைகளை உடைய ஆளுமையாகத் திகழ்ந்த கருணாநிதி, தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளா்க்க எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. கருணாநிதி பற்றி அநேக நூல்கள் வெளிவந்துள்ளன. மேலும், அவருடைய புகழை பரப்பவும், அவருடைய செயல்களை இளைஞா்கள் கற்றுக்கொள்ளவும் நிச்சயம் இந்த நூல்கள் உதவும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட செயலாளா் க. வைரமணி, மாநகர செயலாளரும், மேயருமான மு. அன்பழகன், இளைஞா் அணி அமைப்பாளா் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.