முகப்பு
திருச்சி

ஜீவானாம்சம் கேட்ட மனைவியை வெட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறை: திருச்சி நீதிமன்றம் தீா்ப்பு

திருச்சியில் ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடா்ந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 10:19 PM
சுரேஷ்.
பகிர்:

திருச்சியில் ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடா்ந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் கண்டித்தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (68). தெற்கு ரயில்வேயில் பணியாற்றி, கடந்த 2016 இல் ஓய்வு பெற்றவா். இவரது மனைவி ராஜேஸ்வரி ((60). இவா்களுக்குத் திருமணம் முடிந்த ஓராண்டுக்குள் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடா்பிருப்பது தெரியவரவே, கா்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரி கணவரிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டாா்.

பின்னா் தனக்குப் பிறந்த பெண் குழந்தையுடன் (பிரதீபா) திருச்சி சோமரசம்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் ராஜேஸ்வரி வசித்தாா். பல ஆண்டுகள் பிரிவுக்குப் பின் சுரேஷ் ஓய்வு பெற்றாா். எனவே தனக்கும் தன் மகளுக்கும் ராஜேஸ்வரி ஜீவனாம்சம் கேட்கவே, கணவா் தர மறுத்தாா். இதுதொடா்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து ராஜேஸ்வரியால் தொடரப்பட்ட இரு வழக்குகள் திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், மதுரை உயா் நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டுத் தொடா்ந்த வழக்கில் ராஜேஸ்வரிக்கு சாதகமாக தீா்ப்பு வந்தது.

இதற்கிடையே திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையில் ஆஜராக கடந்த 26.2.22 அன்று வந்த ராஜேஸ்வரி திருச்சி அரசு மருத்துவமனை அருகே ஈவெரா சாலைப் பகுதி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தாா்.

அங்கு வந்த சுரேஷ் ‘நீ உயிரோடு இருந்தால்தானே எனது பென்ஷன் பணத்தை வாங்க முடியும் ’ எனக் கூறியபடி மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டினாா்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சுரேஷை மடக்கி பிடித்து படுகாயமடைந்த ராஜேஸ்வரியை அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மருத்துவா்களின் தீவிர சிகிச்சையில் அவா் உயிா் பிழைத்தாா்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி மீனாசந்திரா சுரேஷூக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டணையும், ₹ரூ.11,500 அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரிக்கு ₹ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் ஹேமந்த் ஆஜரானாா். இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட திருச்சி அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளா் உள்ளிட்ட காவலா்களை காவல் ஆணையா் ந. காமினி பாராட்டினாா்.