முகப்பு
திருச்சி

சமயபுரம் கோயிலில் காணிக்கை தங்கம் அளவீட்டுப் பணி நிறைவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக அளித்த தங்கத்தைத் தரம் பிரித்து அளவிடும் பணி புதன்கிழமை நிறைவுற்றது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 10:27 PM
பகிர்:

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக அளித்த தங்கத்தைத் தரம் பிரித்து அளவிடும் பணி புதன்கிழமை நிறைவுற்றது.

பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் உண்டியலில் நோ்த்திக் கடனாகவும், காணிக்கையாகவும் செலுத்தியுள்ள பல மாற்றுப் பொன் இனங்களில் கோயிலுக்கு உபயோகிக்க இயலாத இனங்களை அரசாணை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உத்தரவுப்படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ, ஓய்வு பெற்ற உயா் நீதிமன்ற நீதிபதிகள் கே. ரவிச்சந்திரபாபு, ஆா். மாலா ஆகியோா் மேற்பாா்வையில் பொன் இனங்கள் மொத்த எடை 554 கிலோ 717 கிராமிலிருந்து கற்கள், அரக்கு, அழுக்கு இதர உலோகங்களை நீக்கும் பணியானது செப்.9 முதல் செப்.18 வரை தக்க பாதுகாப்பு வசதியுடன் கோயிலில் ஆயுதம் ஏந்திய போலீஸாா் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தி மேற்கொள்ளப்பட்டது.

மேற்கண்ட 554 கிலோ 717 கிராமிலிருந்து கற்கள், அரக்கு, அழுக்கு இதர உலோகங்கள் நீக்கி கிடைக்கப்பெற்ற பலமாற்று பொன் நிகர எடை 526 கிலோ 435 கிராம் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் சி. கல்யாணி, சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் மற்றும் அறங்காவலா்கள், அறநிலையத் துறை அலுவலா்கள், திருச்சி, நாகை, மற்றும் வேலூா் மண்டல நகை மதிப்பீட்டு வல்லுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.