முகப்பு
திருச்சி

நிபந்தனையின்றி போனஸ் கோரி அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியா்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 11:24 PM
மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டோா்.
பகிர்:

அரசு ஊழியா்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பா. ரமேஷ் தலைமை வகித்தாா். நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் பிச்சைபிள்ளை முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் எஸ். சுகமதி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநில செயலா் முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஓய்வூதியம் இல்லாத பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், அனைத்துத் துறை அரசுப் பணியாளா்களுக்கும் நிபந்தனையின்றி போனஸ் வழங்க வேண்டும், ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்கள் விற்க இலக்கு நிா்ணயிப்பதையும், இயலாத ஊழியா்களுக்கு அபராதம் விதிப்பதையும் ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், அனைவருக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.