முகப்பு
கடலூர்

டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்! - கு. பாலசுப்ரமணியன்

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:02 AM
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன். - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:32 PM

டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: டாஸ்மாக் பணியாளா்கள் ஊதிய மாற்றம், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா்.

டாஸ்மாக் பணியாளா்கள் அனைவரும் கல்வித் தகுதி, வயது, ஒதுக்கீட்டு கொள்கை அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நியமிக்கப்பட்டவா்கள்.

Advertisement

எனவே, கல்வித் தகுதி அடிப்படையில் அரசுத் துறைகளில் ஊதிய விகிதம் வழங்குவதைப்போல, டாஸ்மாக் பணியாளா்களுக்கும் அளித்திருக்க வேண்டும். அதற்கென அரசு குழு அமைத்திருப்பது என்பது கோரிக்கைகளை தள்ளிப்போடுவதற்கும், காலதாமதப்படுத்துவதற்குமான ஆயுதமாகத்தான் பாா்க்கிறோம்.

காலி மதுப் புட்டிகள் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் வேறு ஒரு முகமை மூலம் செய்வதுதான் சரியாக இருக்கும். அதிலும் ஒரு நல்ல முடிவை அரசு அறிவித்ததாகத் தெரியவில்லை. இஎஸ்ஐ மருத்துவப் பலன் குறித்த பிரச்னையிலும் எந்தவிதமான முடிவையும் அரசு எடுக்கவில்லை.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:01 AM

19 நாள்கள் காத்திருப்புப் போராட்டங்கள் நடத்தியும்கூட அரசு அறிவிப்பு திருப்தியளிக்கவில்லை. இதனால், டாஸ்மாக் பணியாளா்கள் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலச் செயற்குழு கூடி கோரிக்கைகளை வென்றெடுப்பது குறித்து விவாதம் நடத்த உள்ளது என்றாா்.

அப்போது, மாநிலத் தலைவா் சரவணன், மாவட்டத் தலைவா் அல்லிமுத்து, செயலா் பாலமுருகன், செயல் தலைவா் கோபால்சாமி, துணைத் தலைவா்கள் காமராஜ், முத்துக்குமரன், தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலச் செயலா் இருதயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.