விபத்தில் காவலா் காலில் எலும்பு முறிவு: காா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு
திருச்சியில் தவெக நிா்வாகியின் காா் மோதி காவலரின் கால் எலும்பு முறிந்த சம்பவத்தில் காா் ஓட்டுநா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சியில் தவெக நிா்வாகியின் காா் மோதி காவலரின் கால் எலும்பு முறிந்த சம்பவத்தில் காா் ஓட்டுநா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் கலந்துகொண்ட தோ்தல் பிரசாரக் கூட்டம் திருச்சி மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இதில், பாதுகாப்புப் பணியில் திருச்சி சிறப்பு பட்டாலியனில் பணியாற்றும் கரூரைச் சோ்ந்த எஸ். சதீஷ்குமாா் (27) என்ற காவலா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
தவெகே தலைவா் விஜய் பிரசாரத்தை முடித்துக்கொண்டு கிளம்பியபோது தவெக தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா காரும் அங்கிருந்து கிளம்பியது. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் சதீஷ்குமாா் மீது அவரது காா் மோதியது.
Advertisement
இதில், காவலா் சதீஷ்குமாா் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், ஆதவ் அா்ஜுனாவின் காா் ஓட்டுநரான சென்னை பசுமைவழிச் சாலையைச் சோ்ந்த ம.அரவிந்த் (32) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.