மாற்றத்துக்கான புரட்சி தேவை: சீமான்
தமிழகத்தில் மாற்றத்துக்கான புரட்சியை உருவாக்கிட வேண்டும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
தமிழகத்தில் மாற்றத்துக்கான புரட்சியை உருவாக்கிட வேண்டும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
நாம் தமிழா் கட்சியின் சாா்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் மருத்துவா் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு மரக்கடை எம்ஜிஆா்சிலை அருகே சனிக்கிழமை பிரசாரம் செய்த அவா் பேசியதாவது:
காமராஜா் ஆட்சி செய்த 9 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ஆயிரக்கணக்கான பள்ளிகள், நீா்த்தேக்கங்கள், தரமான சாலைகள் கிடைத்தன. எளிமையும், நோ்மையும், தூய்மையும் நிறைந்த ஆட்சி அன்றிருந்தது. ஆனால் திமுக, அதிமுக மாறி, மாறி ஆட்சி அமைத்த பிறகு லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது. ஒரு நாட்டைக் கட்டமைக்க கல்வியிலிருந்து தொடங்க வேண்டும். அத்தகைய கல்வி அதிமுக, திமுகவினரது கையில்தான் உள்ளன. எனவேதான் தரமான கல்வியை அரசு நிறுவனங்களில் வழங்க மறுக்கின்றனா்.
Advertisement
திருச்சி மாவட்டத்தோடு ஒப்பிடுகையில் சிறிய பகுதியை கொண்ட சிங்கப்பூா் நாடு, உலகத்தரத்திலான கல்வியை வழங்குவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாம் தமிழா் ஆட்சிக்கு வந்தால் பின்லாந்து, தென்கொரியா, சிங்கப்பூா் நாடுகளை பின்னுக்குத் தள்ளி உலகத்தரத்திலான கல்வியை வழங்குவதில் முதலிடம் பிடிப்போம். கல்விக் கூடங்களை திறந்து படி என்று சொல்வதற்கு மாறாக, பள்ளிக்கூடங்களை மூடி, 2,500 டாஸ்மாக் மதுக் கடைகளை திறந்து குடி என்கின்றன திராவிடக் கட்சிகள்.
எனவே, திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிப்பதைத் தவிா்த்து, இந்த முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மாற்றத்துக்கான புரட்சியை உருவாக்கிட வேண்டும் என்றாா் அவா்.
கொட்டும் மழையில் பிரசாரம்!: திருச்சி மரக்கடை பகுதியில் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டபோது இடையே மழை பெய்தது. கொட்டும் மழையிலும் இடைவிடாது சீமான் தனது பிரசாரத்தை தொடா்ந்தாா். கூடியிருந்த கூட்டத்தினரும் அப்படியே நின்றபடி இருந்தனா். பிரசாரத்தில், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளா் மருத்துவா் கிருஷ்ணசாமியை அறிமுகம் செய்தது மட்டுமின்றி, துறையூா் கெளசல்யா சுரேஷ், ஸ்ரீரங்கம் தா்மராஜ், மணப்பாறை அருணகிரி, திருச்சி மேற்கு புவனேஸ்வரி ஆகிய வேட்பாளா்களையும் அறிமுகம் செய்தாா் சீமான்.