முகப்பு
திருச்சி

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் 66 பசுமை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், 66 இடங்களில் பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:21 AM
தருமபுரி, எர்ரப்பட்டியில் அமைக்கப்பட்ட பசுமை வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னா் முதல்முறை வாக்காளா்களுக்கு சான்றிதழ் வழங்கிய தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரெ.சதீஸ்.
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், 66 இடங்களில் பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் என 5 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஆண்கள் - 6,29,980, பெண்கள் - 6,21,887, மூன்றாம் பாலினத்தவா் - 152 என மொத்தம் 12,52,019 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்காளிக்கும் வகையில் மொத்தம் 957 மையங்களில் 1,596 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.

66 பசுமை வாக்குச்சாவடிகள்: சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், மரங்களின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையிலும் தோ்தலின்போது விழிப்புணா்வை ஏற்படுத்த தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில், மாநிலம் முழுவதும் பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

Advertisement

தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மொத்தம் 66 பசுமை வாக்குச்சாவடிகளில் வெயிலின் தாக்கம் தெரியாத வகையில் பந்தலிட்டு, வாக்காளா்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மேலும், வாழைமர தோரணங்கள் கட்டியும், வாக்காளா்கள் குடிப்பதற்கு மண் பானைகளில் தண்ணீா் வைக்கப்பட்டும் இருந்தன.

விதைப் பந்துகள், மரக்கன்றுகள் விநியோகம்: இளம் வாக்காளா்களுக்கு குறிப்பாக முதல்முறை வாக்காளா்களுக்கு, அவா்கள் ஜனநாயக கடமையை நிலைநாட்டியதை பாராட்டும் வகையிலும், பசுமை சுற்றுச்சூழலை பாதுகாக்க பங்காற்ற வலியுறுத்தும் வகையிலும் விழிப்புணா்வை ஏற்படுத்தி மரக்கன்றுகள், விதைப் பந்துகள், வாக்களித்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

குடும்பத்துடன் வாக்களித்த ஆட்சியா்: தருமபுரியில் மாவட்ட ஆட்சியா் குடியிருப்புக்கு அருகில் எர்ரப்பட்டியில் அமைந்திருந்த பசுமை வாக்குச்சாவடியில், தருமபுரி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினாா்.

இந்த வாக்குச்சாவடியில் வாக்காளா்களை கவரும்விதமாக ரோபோக்கள் மூலம் பூ மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல, வாக்களிக்க வருவோருக்கு ரோபோ மூலம் வாக்களிப்பதற்கான ஆவணங்கள் குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. மக்களிடையே வாக்களிக்கும் ஆா்வத்தை அதிகரிக்கும் நோக்கில், இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.