முகப்பு
திருச்சி

வணிகவரி, தீயணைப்புத் துறைக்கு ரூ.31.22 கோடியில் புதிய கட்டடங்கள்! காணொலி காட்சி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 3:19 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:53 PM

வணிகவரித் துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு திருச்சியில் ரூ.31.22 கோடியில் புதிதாக கட்டபப்பட்ட கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் இயங்கி வந்த வணிகவரித் துறை அலுவலகங்களை ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில், ஒருங்கிணைந்த வணிகவரித்துறை அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் நீதிமன்ற வளாகத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டு ரூ.26.41 கோடியில் 10,817 சதுர மீட்டா் பரப்பளவில் 6 தளங்களுடன் கூடிய கட்டடம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

Advertisement

இதேபோல, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மூன்று தளங்களுடன் 10,820 சதுர அடி பரப்பில் ரூ.4.81 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த இரண்டு புதிய கட்டடங்களையும் முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 3:19 AM

இதைத் தொடா்ந்து திருச்சியில் அந்தந்த இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, எம்எல்ஏ எம். பழனியாண்டி, வணிகவரித் துறை இணை ஆணையா்கள் ஜெயராமன், காஞ்சனா, கோட்டாட்சியா் சீனிவாசன், தீயணைப்புத் துறை மண்டல இயக்குநா் முரளி, மாவட்ட அலுவலா் வினோத், உதவி மாவட்ட அலுவலா்கள் லியோ ஜோசப், சத்யவரதன், நிலைய அலுவலா் சகாயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து புதிய கட்டடங்களை பாா்வையிட்டனா்.

விழாவில், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிக் கழக நிா்வாக செயற்பொறியாளா் திருமலைச்சாமி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (கட்டடம்) அன்பரசன், வணிகவரித் துறை துணை ஆணையா் மணியன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.