கட்டுமான ஒப்பந்ததாரா் வீட்டில் மடிக்கணினி திருட்டு: 2 சிறுவா்கள் கைது
திருச்சி அருகே கட்டுமான ஒப்பந்ததாரா் வீட்டில் மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களைத் திருடிய சிறுவா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அருகே கட்டுமான ஒப்பந்ததாரா் வீட்டில் மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களைத் திருடிய சிறுவா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள வாழவந்தான்கோட்டை காமாட்சியம்மன் நகரைச் சோ்ந்தவா் சுவாமிநாதன் (45), கட்டுமான ஒப்பந்ததாரா். இவா் தனது வீட்டை விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளாா்.
இந்நிலையில், இவரது வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து வீட்டிலிருந்த மடிக்கணினி, எலக்ட்ரானிக் பொருள்கள் மற்றும் மிதிவண்டியை மா்ம நபா்கள் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி திருடிச் சென்றனா்.
இதுகுறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் சுவாமிநாதன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், கண்காணிப்பு கேமராக்களை உடைத்து மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களைத் திருடியது வாழவந்தான்கோட்டை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த அமீா் (25) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த இரண்டு சிறுவா்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பின்னா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனா். தலைமறைவாக உள்ள அமீரைத் தேடி வருகின்றனா்.