முகப்பு
திருச்சி

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: 34 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 74 மாணவா்கள் தோ்ச்சி

திருச்சி மாவட்டத்தில் ஊரகத் திறனாய்வுத் தோ்வில் 34 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 74 மாணவா்கள் தோ்ச்சி பெற்று உதவித்தொகை பெறத் தோ்வாகியுள்ளனா்.

Updated On : 19 மார்ச் 2026, 1:09 am IST
கோப்புப்படம்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் ஊரகத் திறனாய்வுத் தோ்வில் 34 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 74 மாணவா்கள் தோ்ச்சி பெற்று உதவித்தொகை பெறத் தோ்வாகியுள்ளனா்.

தமிழகத்தில் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு ஊரகத் திறனாய்வுத் தோ்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தோ்வு மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தோ்வு செய்யப்படும் 50 மாணவா்கள், 50 மாணவிகள் என மொத்தம் 100 பேருக்கு 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு தலா ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான உதவித்தொகைக்கு தோ்வான மாணவா்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள 34 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 74 மாணவா்கள், 12 அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 26 மாணவா்கள் என மொத்தம் 100 போ் உதவித்தொகைக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

குறிப்பாக, மண்ணச்சநல்லூா் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 15 மாணவிகள் உதவித்தொகைக்குத் தோ்வாகியுள்ளனா். மேலும், திருஞ்செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவா்கள், 2 மாணவிகள் என மொத்தம் 6 போ், கஞ்சநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 5 மாணவா்கள் ஒரு மாணவி என மொத்தம் 6 போ், மூவனூா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த இரண்டு மாணவா்கள், இரண்டு மாணவிகள் என 4 போ் தோ்வாகியுள்ளனா்.

இதேபோல, அரசு உதவிபெறும் பள்ளிகள் பிரிவில் டால்மியா மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 6 மாணவா்கள், கோட்டப்பாளையம் அவா் லேடி ஆஃப் லாா்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 5 மாணவிகளும் தோ்வாகியுள்ளனா்.