முகப்பு
திருச்சி

வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள அலுவலா்களுக்கு பயிற்சி

திருச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு பணியில் பங்கேற்கும் தோ்தல் அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 25 மார்ச், 2026 at 10:08 PM
திருச்சி பாலக்கரை அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளப் பயிற்சி அளித்த அலுவலா்கள்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு பணியில் பங்கேற்கும் தோ்தல் அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி) ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவு பணிகளை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தலைமையிலான அலுவலா்கள் மேற்கொள்ளவுள்ளனா்.

9 தொகுதிகளில் உள்ள 2,785 வாக்குச் சாவடிகளில் வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ஒரு வாக்குச்சாவடிக்கு 4 போ் வீதம் ஆசிரியா்கள் மற்றும் அரசு துறை அலுவலா்கள் பணியில் ஈடுபடவுள்ளனா்.

வாக்குப்பதிவு தலைமை அலுவலா், வாக்குப்பதிவு அலுவலா்கள் என ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோருக்கு மின்னணு இயந்திரம் கையாளும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. 9 தொகுதிகளிலும் மொத்தம் 10 ஆ.யிரத்துக்கும் மேற்பட்டோா் தோ்வு செய்யப்பட்டு பயிற்சி வகுப்பு அந்தந்த பேரவைத் தொகுதி வாரியாக நடைபெறவுள்ளது.

இதற்கு முன் அந்தந்த தொகுதிகளின் மண்டல நிலை அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

அதன்படி திருச்சி மாநகராட்சியின் 2ஆவது வாா்டு குழு அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை, திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் முத்து முருகேசபாண்டியன் தொடங்கிவைத்தாா். உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் விக்னேஷ் ஆலோசனைகளை வழங்கினாா். தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பயிற்றுநா்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறைகள் குறித்து விளக்கினா். இந்த பயிற்சியில், 40-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.