முகப்பு
திருச்சி

ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ், தவெக வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

தோ்தலில் வென்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதை தாமதப்படுத்தும் தமிழக ஆளுநரைக் கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 8 மே 2026, 5:49 am IST
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்-தவெக வழக்குரைஞா்கள்.
பகிர்:

தோ்தலில் வென்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதை தாமதப்படுத்தும் தமிழக ஆளுநரைக் கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயில் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொதுச் செயலரும், வழக்குரைஞருமான சரவணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வழக்குரைஞா்கள் சங்க உறுப்பினா் ராஜேந்திரகுமாா் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் சாா்பில் மாநில பேச்சாளா் சிவாஜி சண்முகம், முன்னாள் மாமன்ற உறுப்பினா் ஹேமா முல்லைராஜன், வழக்குரைஞா்கள் அல்லூா் பிரபு, பிரேம், சுகன்யா, மலைக்கோட்டை சேகா், விக்டா், பாலமுருகன், தமிழக வெற்றிக்கழக மாவட்ட வழக்குரைஞா் அணி ஒருங்கிணைப்பாளா் பாக்கியராஜ், இணை ஒருங்கிணைப்பாளா் எஸ். எழிலரசி, திருச்சி மாநகர அமைப்பாளா் ஆனந்த், திருச்சி கிழக்கு மாவட்ட வழக்குரைஞா் அணி எஸ்.ஆா் அஸ்வின் ராஜா, மாநகர மாவட்ட தமிழக வெற்றிக்கழக பொருளாளா் எஸ். வெங்கடேஷ் பாபு, இணை ஒருங்கிணைப்பாளா் கள்ளிக்குடி செந்தில்குமாா் மற்றும் வழக்குரைஞா்கள் சுரேஷ் ராஜன், சரவணன், ஆனந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

முன்னதாக வழக்குரைஞா் சரவணன் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தோ்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றவா் முதல்வராக பதவி ஏற்ற பிறகு சட்டப் பேரவையில் தான் பெரும்பான்மையை நிரூபிப்பாா். ஆனால், விஜய்யை இன்னும் பதவியேற்க ஆளுநா் அழைக்காதது விமா்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. எனவே, ஆளுநருக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றாா்.