பதவி ஆசைக்காக தவெகவுடன் கூட்டணியா? காங்கிரஸ் விளக்கம்
தவெகவுடன் கூட்டணி குறித்த விமர்சனங்களுக்கு காங்கிரஸ் விளக்கம்
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்தது தொடர்பான விமர்சனங்களுக்கு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செ. ராஜேஷ் குமார் எம்எல்ஏ கூறியிருப்பதாவது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்துச் சில விமர்சனங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக, பதவி ஆசைக்காகவும் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், முதுகில் குத்திவிட்டதாகவும் சிலர் கூறுவதை இந்திய தேசிய காங்கிரஸ் முற்றிலுமாக மறுக்கிறது.
Advertisement
Advertisement
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பல்வேறு அரசியல் அழைப்புகள் எங்களுக்கு வந்ததை நாடறியும். இருப்பினும், மதவாத சக்திகளுக்கு எதிராக "இந்தியா" கூட்டணியில் பயணிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் கடுமையாக உழைத்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஜனநாயக நாட்டில் மக்களின் எண்ண ஓட்டம் சில நேரங்களில் எதிர்பாராத தேர்தல் முடிவுகளைத் தருகிறது. அந்த வகையில், தமிழக மக்களின் தற்போதைய மனநிலை மற்றும் ஜனநாயக முடிவுகளுக்குத் தலைவணங்கி, மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.
தமிழக வெற்றிக் கழகம் தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே முன்னிறுத்திச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய், காமராஜரை தனது கொள்கைத் தலைவராக ஏற்று, அவர் காட்டிய வழியில் சமூக நீதிக்காகத் தொடர்ச்சியாகப் பயணிப்போம் என்கிற கொள்கையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
காமராஜரின் லட்சியங்களை உள்வாங்கி, சமூக நீதிப் பாதையில் பயணிப்பதாக அறிவித்துள்ள ஓர் இயக்கத்தை ஆதரிப்பது, தமிழகத்தில் மதச்சார்பற்ற விழுமியங்களை வலுப்படுத்தும் என்று காங்கிரஸ் நம்புகிறது. ஆர்எஸ்எஸ், மதவாத சக்திகள் தமிழகத்துக்குள் எந்தக் காலத்திலும் காலூன்றி விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் சமரசமற்ற உறுதியைக் கொண்டுள்ளது.
மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும், தமிழகத்தில் ஒரு வலிமையான மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். இதில் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கப்படுவதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.
தமிழக மக்களின் நலனையும், மாநிலத்தின் அமைதியையும் கருத்தில் கொண்டு, மதவாத சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இத்தகைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டே இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி என்றும் மதவாதத்திற்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும், சமூக நீதியைக் காக்கவும் தனது பயணத்தைத் தொடரும்.
Congress Clarifies Criticisms Regarding Alliance with Tamilaga Vettri Kazhagam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.