முகப்பு
வேலூர்

500 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்

 ஒசூர், செப்.16:சூளகிரி ஒன்றியம், காளிங்காவரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 500 மாணவர்கள் படித்துவரும் நிலையில், ஒரு ஆசிரியர் மட்டுமே இப்பள்ளிக்கு வந்து செல்கிறார்.   சூளகிரியில் இருந்து 10 கிலோ மீட்டர்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 11:14 PM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2023 at 9:07 PM

 ஒசூர், செப்.16:சூளகிரி ஒன்றியம், காளிங்காவரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 500 மாணவர்கள் படித்துவரும் நிலையில், ஒரு ஆசிரியர் மட்டுமே இப்பள்ளிக்கு வந்து செல்கிறார்.

  சூளகிரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் 4 மலைகளுக்கு இடையே உள்ள கிராமம் காளிங்காவரம். இங்கு 1 தொடக்கப் பள்ளியும், ஒரு உயர்நிலைப் பள்ளியும் உள்ளன.

  உயர்நிலைப் பள்ளியில், சுற்றியுள்ள கிராமங்களான சிம்பல்திராடி, பெரியமட்டப்பள்ளி, தொட்டப்பள்ளி, கட்டகானப்பள்ளி, தின்னூர், குருமூர்த்தி, சின்னமடகு, சின்ன கொத்தூர், பெரிய கொத்தூர், பந்தல்நத்தம், பேடப்பள்ளி உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

Advertisement

  கிராமத்திற்கு கிருஷ்ணகிரியில் இருந்தும், ஒசூரில் இருந்தும் நகர பேருந்துகள் 4 முறை இயக்கப்படுகின்றன. இப்பள்ளியில் கடந்த ஆண்டு 11-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி போதித்து வந்தனர்.

  இதனால் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொது தேர்வில் 72 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.

  இவ்வாண்டு தொடக்கத்தில் 600 மாணவர்கள் கல்வி பயின்றனர். ஆசிரியர்கள் இல்லாததால் 70 மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். 30 மாணவர்கள் படிப்பை இடை நிறுத்தம் செய்துள்ளனர்.

  பள்ளிக்கு ஆசிரியர் பணியிடங்கள் 13 இருந்தும், தற்போது தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜேவதேவ ரெட்டி மட்டுமே வந்து செல்கிறார்.

  இப்பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்படும் ஆசிரியர்கள் ஒரே ஆண்டில் கவுன்சலிங் மூலம் நகர்ப்புற பள்ளிகளுக்குச் செல்வதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமாராவ் கூறினார்.

  போதுமான கட்டட வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம் இருந்தும் போதிய பஸ் வசதி இல்லாமையால், இந்த கிராமத்திற்கு வரும் ஆசிரியர்கள் உடனடியாக மாறுதலில் செல்லும் சூழல் நிலவுகிறது.

  வனப் பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில், ஆசிரியர் பணியில் சேரும்போது 3 ஆண்டுகள் மாறுதல் இல்லை என்ற அரசு ஆணை உள்ளது. அத்தகைய உத்தரவு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இத்தகைய பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிபுரியும் சூழல் உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.