ஒசூர், மே 21: தமிழக அரசு அமல்படுத்தியுள்ள சமச்சீர் கல்வியால் சிறுபான்மை மொழி மாணவர்களுக்கோ அல்லது சிறுபான்மையினர் பள்ளிகளுக்கோ எந்த பிரச்னையும் ஏற்படாது என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் உறுதியளித்தபோதிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கு மொழி மாணவர்கள் புதிய சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதுநாள் வரை, தொடக்கப்பள்ளியில் 5 வகுப்பு வரைக்கும் தாய்மொழியான தெலுங்கில் பாடம் படித்த இந்த மாணவர்கள், 6-ம் வகுப்பில் அறிவியல், கணிதம், சமூகவியல் பாடங்களை தெலுங்கு மொழியில் படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டாலும், இவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் கட்டாய மொழிப் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த மாணவர்களுக்கு தமிழ் அரிச்சுவடிகூடத் தெரியாத நிலையில், இவர்கள் எப்படி 6ம் வகுப்பு தமிழ்ப் பாடத்தைக் கற்று, தேர்வு எழுதுவார்கள் என்பதுதான் தற்போது சிறுபான்மையினரான தெலுங்குமொழியின மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்கொண்டுள்ள சிக்கல்.
இந்த சிறுபான்மையின மாணவர்கள், தொடர்ந்து தங்கள் தாய்மொழியான தெலுங்கு மொழிப்பாடத்தை விருப்பப் பாடமாகப் படிக்கலாம் என்று தமிழக அரசின் ஆணை அனுமதிக்கின்றது. ஆனால் அதற்கு மதிப்பெண் கிடையாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
மதிப்பெண் இல்லாவிட்டால் அந்தப் பாடத்தை ஏன் தங்கள் குழந்தைகள் சிரமப்பட்டு படிக்க வேண்டும் என்று கேட்கின்றனர் சிறுபான்மையின மொழி மக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், தேன்கனிக்கோட்டை, வேப்பனப்பள்ளி, தளி, கெலமங்கலம், பகலூர், பேரிகை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் தெலுங்கு, கன்னடம், உருது உள்ளிட்ட 532 சிறுப்பான்மை மொழி வழிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பல பள்ளிகளில் தெலுங்குதான் பயிற்றுமொழி. கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் கன்னட மொழி பயிற்று மொழியாக இருக்கிறது. மொத்தம் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
சிறுபான்மையினர் மொழிப் பள்ளிகளில் தமிழ் விருப்பப்பாடமாக இருந்தால், அதை மதிப்பெண் பற்றிய கவலையில்லாமல், மொழியை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் மாணவர்கள் படிப்பதில் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என்று கருத்து தெரிவிக்கும் சிறுபான்மைமொழி பெற்றோர், அரசாணையில் தவறு நடந்திருக்க வேண்டும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டதற்கு, அரசாணை இப்படித்தான் வந்துள்ளது என்று உறுதிப்படுத்தினர். தமிழக எல்லைப் பகுதியில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழகத்தில் பல இடங்களில் உள்ள உருது பள்ளிகளுக்கும் இதே நிலைதான். இது குறித்து அனைவரும் குரல் கொடுக்கும்போது, தமிழக அரசு தனது முடிவில் மாற்றத்தைக் கொண்டுவரலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.