அரூர், அக். 26: வருவாய் மற்றும் கனிமவளத்துறையினரின் கெடுபிடி காரணமாக அரூரில் 50 சதவீத செங்கல் சூளைகள் மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குடிசை வீடுகளை, கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் முதல்கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் 2010-2011-ம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் 7,165 வீடுகளும், இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தில் 2,699 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான வீடுகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதால், மணல், இரும்புக் கம்பி, உளிக்கல், சிமெண்ட், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலைகள் அபரிதமாக உயர தொடங்கியது.
இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2.50 ஆக இருந்த செங்கல் தற்போது 5 முதல் 8 வரையிலும் விற்பனையாகிறது.
அதிக அளவில் புகார்கள் வரத்தொடங்கியதும் கலைஞர் வீட்டு வசதி திட்டம், இந்திரா காந்தி நினைவு குடியிருப்புகள் திட்டங்களுக்கு செங்கல் வாங்குவோருக்கு குறைந்த விலையில் செங்கல் விற்பனை செய்ய வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
செங்கல் விலையை குறைக்க வலியுறுத்தி செங்கல் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், செங்கல் சூளைகள் வைத்திருப்போரை வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறையினர் கணக்கெடுப்பு செய்து அரசுக்கு தொழில் வரி செலுத்த வேண்டும் என்றனர்.
அதனையெடுத்து அரூர் வருவாய் வட்டத்தில் 26 பேர் தலா 12,700 கட்டணமாக செலுத்தி செங்கல் தொழில் செய்வதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இதையடுத்து செங்கல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர் மாறாக 50 சதவீதம் பேர் செங்கல் தொழில்களை கைவிட்டுவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்ட மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியுள்ளவர்கள். எவ்வித தொழிற்சாலையும், வேலைவாய்ப்புகளும் இல்லாத நிலையில் பலர் கோவை, ஈரோடு, பெங்களூர், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு பிழைப்புக்காக சென்று வருகின்றனர்.
விவசாய தொழில்களையே நம்பியிருக்கும் விவசாயிகள், தொழிலர்கள் சிலர் விவசாயம் சார்ந்த மாற்றுத்தொழில் என்ற அடிப்படையில் செங்கல் அறுக்கும் பணிகளை தொடங்கினர். ஆனால் தற்போது அரசு விதித்துள்ள விதிமுறைகளால் குறிப்பிட்ட சிலரே செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனராம்.
இது குறித்து கட்டுமானத் தொழிலாளர் சங்க மண்டல செயலரும், செங்கல் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பி.இளம்பரிதி கூறியது:
இயந்திரங்கள் உதவியின்றி உடல் உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருள் செங்கல். தற்போது செங்கல் உற்பத்தித் தொழில்களை தொடங்கவும், உரிமம் பெறுவதற்கும் 13 ஆயிரம் வரையிலும் அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது.
ஒரு லட்சம் செங்கல்களை தயாரிக்க கூலி ஆட்கள், மண், விறகு, தண்ணீர், டிராக்டர் வாடகை உள்பட 2.50 லட்சம் செலவாகிறது. இவையில்லாமல் செங்கல் தயாரிப்பு, சூளையில் அடுக்கும் பணிகளின் போதும் சுமார் 15 ஆயிரம் செங்கல் வீணாகின்றன. இதன் அடிப்படையிóல் செங்கல் ஒன்றின் உற்பத்திச் செலவு 3 ஆகிறது.
எனவே ஏரிகளில் தூர்வாரிய பிறகு வீணாகும் மண், அல்லது மேடு பள்ளங்களாக நீர்நிலைகளில் தேவையில்லாத மண்களை அரசு குறைந்த விலையிலோ, அல்லது இலவசமாகவோ வழங்கினால் அரசு நிர்ணயிக்கும் விலைக்கு செங்கல்களை விற்பனை செய்ய முடியும் என்றார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் இரா. ஆனந்தகுமார் திங்கள்கிழமை கூறியது:
செங்கல் உற்பத்தியாளர்கள் கனிம வளத்துறை அலுவலர்களை அணுகி அனுமதியை பெறலாம். ஏரி, குளங்களில் வீணாகும் மண்களை அரசு விதிமுறைகளை உள்பட்டே வழங்க முடியும். விதிமுறைகளை தளர்த்தினால் நாட்டின் கனிம வளங்கள் பாதிக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.