குடியாத்தம், ஏப். 22: பீடித் தொழிலாளர் பிள்ளைகள் என்ற பெயரில் தகுதியற்றவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதைத் தவிர்க்க மாணவர்களின் பெயரில் 0 பேலன்ஸ் அக்கவுண்ட்டில் வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அரசின் தொழிலாளர் சேமநல ஆணையம் முடிவெடுத்துள்ளது.
இந்திய அரசு, தொழிலாளர் நலத்துறை மூலம் பீடித் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், மேல்விஷாரம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, வாணியம்பாடி ஆகிய இடங்களில் இயங்கி வரும் பீடித் தொழிலாளர் சேமநல மருத்துவமனைகள் மூலம் பீடித் தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இம்மருத்துவமனைகள் மூலம் பீடித் தொழிலாளர் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில் 2009-10அம் கல்வி ஆண்டில் 622 பள்ளிகளைச் சேர்ந்த 29,359 மாணவ, மாணவிகளுக்கு அவரவர் படிக்கும் பள்ளிகள் மூலம் ரூ. 2.70 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
2010-11ஆம் கல்வியாண்டில் 30,011 மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதை சரிபார்க்கும்போது சில விண்ணப்பதாரர்கள் பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக போலியான சான்றிதழ்களுடன் விண்ணப்பம் செய்துள்ளது தெரிய வந்தது.
குறிப்பாக ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், பேர்ணாம்பட்டு பகுதிகளில் பீடித் தொழிலாளர் அல்லாதோர் போலிச் சான்றிதழ்களுடன் விண்ணப்பித்துள்ளதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து தொழிலாளர் துணை சேமநல ஆணையர் டி. ஜோப்பிரின்ஸ் கடந்த 7-ம் தேதி வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள பீடி கம்பெனிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். இதில் தவறுகள் நடந்துள்ளது தெரிய வந்தது.
ஆய்வின்போது சில பீடி கம்பெனிகள் மிகவும் குறைந்த பீடி உற்பத்திக்கான சுங்க வரியை செலுத்தி வருவதும், கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து கல்வி உதவித் தொகை வழங்கும் முன் விண்ணப்பதாரர்கள் பீடித் தொழிலுக்கான உரிய ஆவணங்களை (பீடி கணக்குப் புத்தகம், அடையாள அட்டை, 2009-10ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிச் சீட்டு) அருகிலுள்ள பீடித் தொழிலாளர் நல மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் சமர்ப்பித்து, சரிபார்த்த பின்னரே கல்வி உதவித் தொகையை வழங்க ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பின்னர் தகுதியான பீடித் தொழிலாளர்களின் பிள்ளைகள் பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்கி அதன் மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
எனவே வேலூர் மாவட்டத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ள பீடித் தொழிலாளர்கள் மேற்கூறிய ஆவணங்களை அருகிலுள்ள பீடித் தொழிலாளர் மருத்துவமனையில் வரும் மே மாதம் 15-ம் தேதிக்குள் செலுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம் என பேர்ணாம்பட்டு பீடித் தொழிலாளர் மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் என். உத்தமன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.