முகப்பு
வேலூர்

பயன்பாட்டுக்கு வருமா பஸ் நிலையம்?

வந்தவாசி, செப். 17: அணுகுசாலை அமைக்கும் பணி தாமதமாகி வருவதால் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான வந்தவாசி புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2.

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:32 PM
பகிர்:

வந்தவாசி, செப். 17: அணுகுசாலை அமைக்கும் பணி தாமதமாகி வருவதால் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான வந்தவாசி புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2.65 கோடி கடன்பெற்று, நகராட்சி பங்களிப்பாக மீதித்தொகையையும் சேர்த்து சுமார் ரூ.5 கோடியில் காமராஜர் நகர் அருகே இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில், 26 பஸ் நிறுத்துமிடங்கள், 31 கடைகள், 2 உணவகங்கள், 2 ஓய்வறைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.

கடந்த 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. பணிக்காலம் 25 மாதங்கள் ஆகும். ஆனால், அதற்கு 7 மாதங்களுக்குப் பிறகே இந்த பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய பஸ் நிலையத்தைத் திறந்துவைத்தார். இருப்பினும், பஸ் நிலையம் செல்ல அணுகுசாலை அமைக்கப்படாததால், இதை பயன்படுத்த முடியாத நிலை நிலவியது.

தனியார் நிலத்தை பெறுவதில் சிக்கல்!

இதையடுத்து ரூ.1 கோடி அரசு மானியம் மற்றும் ரூ.1 கோடி நகராட்சி பங்களிப்புடன் மொத்தம் ரூ.2 கோடியில் அணுகுசாலை அமைக்கும் பணி 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த அணுகுசாலை 910 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இதில் சுமார் 300 மீட்டர் நீள நிலம் தனியார் சிலருக்கு சொந்தமானதாகும். இதையடுத்து, அரசு நிர்ணயிக்கும் விலைக்கு நிலத்தை கொடுப்பதாக அவர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு ஒரு சதுர அடிக்கு ரூ.25 விலையாக நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த விலையை உயர்த்தித் தரவேண்டும் என்று அவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் இதுகுறித்து மறுஆய்வு செய்யக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு நகராட்சி சார்பில் பிரேரணை அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில் முடிக்க உத்தரவிட்டும்..!

இதையடுத்து, விலையை மறுநிர்ணயம் செய்யும்வரை தாற்காலிகமாக சாலை அமைத்துக்கொள்ள அவர்கள் சிலரிடமிருந்து தாற்காலிக ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த அணுகுசாலை அமைப்பதற்கான பணிக்காலம் 6 மாதங்கள் ஆகும். ஆனால் பணிக்காலம் முடிந்து ஒரு மாதமாகியும் அணுகுசாலை அமைக்கும் பணியில் பாதியளவுகூட முடியவில்லை.

கடந்த ஜூலை மாதம் புதிய பஸ்நிலையத்தை ஆய்வுசெய்த அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அணுகுசாலை அமைக்கும் பணி முடிக்கப்படவில்லை என்றால் அதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி நகராட்சி பொறியாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக நிருபர்களிடம் கூறினார். இருப்பினும், இதுதொடர்பாக எவ்வித முன்னேற்றமும் இல்லை என்கின்றனர் நகர மக்கள்.

புதிய பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வராததால் கடந்த மூன்றரை ஆண்டுகளாக பலமுறை நடைபெற்ற பஸ்நிலைய கடைகளுக்கான ஏலத்தில் யாரும் பங்கேற்கவில்லை. மேலும் புதிய பஸ்நிலையத்தினுள் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

எனவே, அணுகுசாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம் ஆகும்.

 

முழு கட்டுரையைப் படிக்க →