முகப்பு
வேலூர்

செம்மரங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

குடியாத்தம், மார்ச் 21: குடியாத்தம் வனச் சரகத்தில் பரவலாக வளர்ந்துள்ள, விலை உயர்ந்த செம்மரங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகவும் பெரி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:22 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:05 PM

குடியாத்தம், மார்ச் 21: குடியாத்தம் வனச் சரகத்தில் பரவலாக வளர்ந்துள்ள, விலை உயர்ந்த செம்மரங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டிலேயே மிகவும் பெரியது குடியாத்தம் வனச்சரகம். சுமார் 33,000 ஹெக்டேர் பரப்பளவில் (85 ஆயிரம் ஏக்கர்) இது அமைந்துள்ளது. வனப்பகுதி முழுவதும் ஆந்திர மாநில எல்லையோரம் உள்ளது.

இந்த சரகத்தில், வனச்சரகர் தலைமையில் வனவர்கள், வனக்காப்பாளர்கள் உள்ளிட்ட 40 ஊழியர்கள் மட்டுமே வேலை செய்கின்றனர்.

Advertisement

வனப்பகுதியில் மரம் வளர்த்தல், வளர்ந்த மரங்களை பாதுகாத்தல், யானைகள், கால்நடைகள் நடமாட்டத்தைக் கண்காணித்தல், கள்ளச் சாராயம் காய்ச்சுவதைத் தடுத்தல், தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் உள்ளதால் ஆள்கள் பற்றாக்குறை உள்ளது. பரந்து கிடக்கும் வனப்பகுதியில் அவர்களால் பராமரிப்புப் பணிகளை முழுமையாக செய்ய முடிவதில்லை.

இங்கு 30 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட சுமார் 40 ஆயிரம் செம்மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன.சந்தன மரங்களுக்கு அடுத்தபடியாக அதிக விலைபோகும் செம்மரங்களை சமூக விரோதிகள் செம்மரங்களை வெட்டி கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். விலை உயர்ந்த கலைப் பொருள்கள் தயாரிக்க செம்மரங்கள் பயன்படுகின்றன. 1 டன் செம்மரம் ரூ. 5 லட்சம் வரை விற்பனையாகிறது. இவை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுகின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் குடியாத்தம் வனச் சரகத்தில் பல இடங்களில் வெட்டி, கடத்தப்படவிருந்த சுமார் நான்கைந்து டன் செம்மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்செயலில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். பலர் தப்பியோடி விட்டனர். மரக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரு மரத்தை 2 பேர் கை ரம்பத்தால் அறுக்க சுமார் 1 மணி நேரம் ஆகும். ஆனால் கடத்தல்காரர்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செயய்ப்பட்ட பேட்டரியில் செயல்படும் ரம்பத்தின் உதவியால் 2 நிமிடங்களில் ஒரு மரத்தை அறுத்து, துண்டுகளாக்கி கடத்திச் செல்வதாக கூறப்படுகிறது.

மாவட்டம் முழுவதிலும் சில சமூக விரோத கும்பல்கள் ஒன்றிணைந்து இச்செயலில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களுக்கு அரசியல் பின்னணியும் உள்ளதாகத் தெரிகிறது.

மரங்களை வெட்டிக் கடத்தும் சமயங்களில் இவர்கள் நாட்டுத் துப்பாக்கி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களுடன் இருப்பதால், இவர்களைப் பிடிக்க வனத் துறையினர் அஞ்சும் நிலை உள்ளது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ஒரு வன அதிகாரி கூறியது: குடியாத்தம் வனச் சரகம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு வனப் பகுதிகளில் ஏராளமான செம்மரங்கள் வளர்ந்துள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் மதிóப்புள்ள இம்மரங்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆந்திரம் போன்ற மாநிலங்களில் காவல்துறையினரும் வன பாதுகாப்பில் ஈடுபடுத்தப் படுகின்றனர். அவர்கள் துப்பாக்கிகளுடன் வனப் பகுதிகளில் ரோந்து செல்கின்றனர்.

அதைப்போல் தமிழ் நாட்டிலும் வன பாதுகாப்பில் காவல்துறை ஈடுபடுத்தப்பட வேண்டும். அல்லது வனத் துறையினருடன் இணைந்து ரோந்து நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கூடுதலாக வன ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை பாதுகாப்புப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடத்தல்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் செம்மர கடத்தல்கள் முழுமையாக தடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.