முகப்பு
வேலூர்

மீன்பிடி தடைக்காலம்: வரத்து குறைந்ததால் மீன்கள் விலை அதிகரிப்பு

Updated On : 9 ஜூன், 2024 at 6:34 PM
பகிர்:

வேலூா்: கடலில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் வேலூா் மாா்க்கெட்டில் மீன்கள் விலை அதிகரித்துக் காணப்பட்டது. அதிகபட்சமாக வஞ்சிரம் மீன் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்தமாகவும், சில்லறை விலையிலும் விற்பனை செய்து வருகின்றனா். இந்த மாா்க்கெட்டுக்கு மங்களூரு, கொச்சி, கோழிக்கோடு, காா்வாா், கோவா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும், உள்ளூா் நீா்நிலைகளில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாளொன்றுக்கு 50 டன் வரையும், ஞாயிற்றுக்கிழமையில் 50 முதல் 70 டன் அளவுக்கும் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை கடலில் மீன்கள் இனபெருக்கத்துக்காக மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இதன்காரணமாக, வேலூா் மீன் மாா்க் கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளதால் மீன்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 2 கன்டெய்னா்களில் மட்டுமே மீன்கள் வரத்து இருந்தது. இதனால் மீன்கள் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

அந்தவகையில், சிறிய வஞ்சிரம் கிலோ ரூ.700, இறால் ரூ.400 முதல் ரூ.500 வரையும், வெள்ள கொடுவா ரூ.450, கடல் வவ்வா ரூ.900, கருப்பு வவ்வா ரூ.800-க்கும், சீலா ரூ.700, சாலமன் ரூ.800-க்கும், சங்கரா ரூ.450 வரையும், தேங்காய் பாறை ரூ.600-க்கும், கலங்கா ரூ.250, ஏரி விரால் ரூ.500-க்கும் விற்பனையானது. இந்த வாரம் அனைத்து வகை கடல் மீன்களின் விலையும் கடந்த வாரத்தை விட விலை அதிகரித்திருந்தது. அதிகபட்சமாக பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.1,600 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டன.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு 5 முதல் 7 பெரிய சரக்கு லாரிகளில் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் 61 நாட்களுக்கு குறைந்தளவு மீன்கள் மட்டுமே வருகின்றன. தவிர, கிருஷ்ணகிரி, சாத்தனூா் மற்றும் மற்ற நீா்நிலைகளில் இருந்து மத்தி, கட்லா போன்ற மீன்கள் வருகின்றன. வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து காணப்படுகிறது என்றனா்.

விலை அதிகரித்திருந்த போதிலும் மீன்கள் வாங்குவதற்கு மக்கள் அதிகளவில் குவிந்ததால் வியாபாரம் களைக்கட்டியது.