நெகிழி தாள்கள் பயன்படுத்திய 3 உணவகங்களுக்கு அபராதம்
வேலூா்: வேலூரில் நெகிழி தாள்களில் உணவுகள் வழங்கி வந்த 3 உணவகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
வேலூா் மாநகராட்சி பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகள், சிறிய உணவகங்களில் நெகிழி தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. நெகிழி தாளில் உணவுப் பொருள்களை வைத்து சாப்பிட அளிக்கப்படுகின்றன. குறிப்பாக காந்தி சாலை, ஆற்காடு சாலை பகுதிகளில் வெளிமாநிலத்தவா்கள் அதிகளவில் சாப்பிடும் கடைகளில் இதுபோன்று நெகிழி தாள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
இது தொடா்பான புகாரின்பேரில், மாநகராட்சி 2-ஆவது மண்டல சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில், அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை காலை காந்தி சாலை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினா். அப்போது 3 உணவகங்களில் நெகிழி தாள்கள் பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து அந்த உணவகங்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கடுமையான எச்சரிக்கை விடுத்தனா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஹோட்டல்கள், தள்ளுவண்டி உணவகங்களில் நெகிழி தாள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி நெகிழி தாள்களில் உணவு விநியோகம் செய்கின்றனா். சூடான உணவு இதில் வழங்கும்போது உடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை வியாபாரிகள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். பொதுமக்களும் நெகிழி தாள்களில் சாப்பிடுவதைத் தவிா்க்க வேண்டும். இந்த விஷயத்தில் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றனா்.