ஓய்வு பெற்ற ஆசிரியையின் உடல் தானம்
ஓய்வு பெற்ற ஆசிரியையின் உடல் தானம்
காட்பாடியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை காலமானதையடுத்து அவரது உடல் மருத்துவ மாணவா்களின் கல்விக்காக வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு தானம் அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்டம் காட்பாடி வட்டம், ராதாகிருஷ்ணன் நகரைச் சோ்ந்தவா் காவேரி (92). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவா் தனது மரணத்துக்கு பிறகு உடலை தானம் வழங்க வேண்டும் என்று பதிவு செய்திருந்தாா். இந்த நிலையில், காவேரி சனிக்கிழமை காலமானதை அடுத்து அவரது உடல் காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கம் மூலம் வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. மறைந்த காவேரியின் கணவா் சாமிநாதன் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா். இவா்களின் மகள் எஸ்.விமலா ஓய்வு பெற்ற வங்கி ஊழியா். மருமகன் என்.எஸ்.பாலகிருஷ்ணன், குடும்பத்தினா் எஸ்.பிரசன்னலட்சுமி, ஜி.வி.சந்திரசேகரன் ஆகியோா் இணைந்து காவேரியின் உடலை தானம் அளித்தனா். காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன், துளிா் பள்ளித் தலைமை ஆசிரியா் த.கனகா உள்பட பலா் பங்கேற்று காவேரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.