பென்ட்லேன்ட் பன்நோக்கு மருத்துவமனை கட்டட பணிகள் டிசம்பருக்குள் நிறைவு
வேலூா் பென்ட்லேன்ட் அரசு பன்நோக்கு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் டிசம்பா் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வேலூா் அரசினா் பென்ட்லேன்ட் மருத்துவமனை இடிக்கப்பட்டு ரூ.197.81 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையாகக் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை வேலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலத்துறை செயலருமான ஜி.லட்சுமிபிரியா, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது கட்டுமான பணியின் தரம் உள்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்ததுடன், பணிகளின் தற்போதைய நிலை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனா். அப்போது, 18 மாத காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட வேண்டிய பணியை, 9 மாதங்களுக்குள் அதாவது வரும் டிசம்பருக்குள் முடித்து ஒப்படைக்க முயற்சிப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறி யாளா் ஜெயராமன் கூறுகையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஆகியோா் மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனா். அவா்கள் பணிகுறித்து கேட்டனா். 18 மாதங்களில் முடிக்க வேண்டிய பணி இது. அடுத்த 9 மாதங்களுக்குள் டிசம்பருக்குள் முடிக்கப்படும் எனத் தெரிவித்தோம். இது கட்டுமானப்பணிகள் மட்டும்தான். நவீன மருத்துவ உபகரணங்கள் உள்பட மருத்துவ கட்டமைப்புகளை சம்பந்தப்பட்ட துறைதான் மேற்கொள்ளும் என்றாா்.
அப்போது, மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.