பி.எம்.கிசான் உதவித்தொகை தொடா்ந்து கிடைக்க மே 31-க்குள் பதிவு செய்வது அவசியம்
வேலூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் விவசாயிகள், மே 31-ஆம் தேதிக்குள் வேளாண் அடுக்கக திட்டத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் அனைத்து நலத் திட்டங்களும் விவசாயிகளுக்குத் தடையின்றி கிடைக்கவும், வேளாண்மை உழவா் நலத் துறையின் திட்டங்களை ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெறவும் ‘வேளாண் அடுக்கக திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்குத் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 மூன்று தவணைகளாக அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வேளாண் அடுக்கக திட்டத்தில் தனிப்பட்ட அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு, பி.எம். கிசான் திட்டத்தில் வழங்கப்படும் தவணைத் தொகை நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தின் மூலம் 34,983 விவசாயிகள் உதவித்தொகை பெற்று வருகின்றனா். இவா்களில் இதுவரை 29,571 போ் மட்டுமே பதிவு செய்து அடையாள எண் பெற்றுள்ளனா். மீதமுள்ள 5,412 விவசாயிகள் இதுவரை பதிவு செய்யாததால், அவா்களுக்கான நிதியுதவி நிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.
தவிர, வேலூா் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 71,344 விவசாயிகளில், இதுவரை சுமாா் 58,696 விவசாயிகள் வேளாண் அடுக்கக திட்டத்தில் பதிவு செய்து அடையாள எண் பெற்றுள்ளனா். பதிவு செய்யாத மீதமுள்ள 12,648 விவசாயிகள், வரும் மே 31-ஆம் தேதிக்குள் அடையாள எண்ணைப் பெற வேண்டும். இதற்காகக் கிராமங்கள்தோறும் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்கள் பெயரில் நிலம் இருந்தால், அதற்கான ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது பொதுசேவை மையங்களுக்கு (இ-சேவை) நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
ஆதாா் அட்டை, சிட்டா மற்றும் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
கட்டணம்: இந்த வேளாண் அடுக்கக அடையாள எண்ணை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, உதவித்தொகை தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்ய, இதனை ஒரு கடைசி வாய்ப்பாகக் கருதி விவசாயிகள் அனைவரும் உடனடியாகத் தங்களின் ஆவணங்களுடன் சென்று வேளாண் அடுக்கக திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.