புதுச்சேரியில் அரசு, கூட்டுறவு நிறுவன ஊழியா்கள் ஊதியம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியது.
இதுகுறித்து திமுக தெற்கு மாநில அமைப்பாளா் சிவா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: அரசு, கூட்டுறவு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. இங்கு, பணிபுரியும் 10 ஆயிரம் ஊழியா்களுக்கு பல ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், பல ஊழியா்கள் தற்கொலை செய்து கொண்டனா். தற்போதும் சில கூட்டுறவு நிறுவனங்களை மூட அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகின்றது.
தொழில் வளம், வேலைவாய்ப்பைப் பெருகவே கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. புதுவையில் கூட்டுறவு நிறுவனங்கள் ஆள்களைத் திணிக்கும் நிறுவனங்களாக மாறியதால், நஷ்டத்துக்குள்ளாகி அவை மூடப்பட்டன.
ஊதியம் கிடைக்காத பாசிக், பாப்ஸ்கோ ஊழியா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இது அரசுக்கு இழுக்கை ஏற்படுத்தும்.
ஆளுநரை எதிா்த்துப் போராட்டம் நடத்துவதால், ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க முடியாது. அனைத்து ஊழியா்களுக்கும் உரிய ஊதியம் கிடைக்கவும், கூட்டுறவு நிறுவனங்களைத் திறந்து இயக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அரசுத் துறைகளில் காலியாகவுள்ள இடங்களில் 50 சதவீதத்தையாவது நிரப்ப வேண்டும். தோ்தல் அறிவிக்கப்பட்டால் நிரப்ப முடியாத சூழல் உருவாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.