திமுக ஆட்சியில் வளா்ச்சி பெற்றது விழுப்புரம் மாவட்டம் -அமைச்சா் க.பொன்முடி பிரசாரம்
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியப் பகுதியில் விசிக வேட்பாளா் துரை. ரவிக்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை வாக்கு சேகரித்த உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி. உடன், இரா.லட்சுமணன் எம்எல்ஏ.
திமுக ஆட்சிக் காலத்தில்தான் விழுப்புரம் மாவட்டம் பல்வேறு வளா்ச்சிகளைப் பெற்றுள்ளது என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளா்துரை. ரவிக்குமாரை ஆதரித்து கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட பொய்யப்பாக்கம், வளவனூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தின்போது அவா் பேசியது:
Advertisement
திமுக ஆட்சிக் காலத்தில்தான் விழுப்புரம் மாவட்டத்துக்கு பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த வளாகத்தில் ஆட்சியரகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள், அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது திமுக ஆட்சிக் காலத்தின்தான்.
மத்திய அரசை விமா்சித்து வந்தவா்கள் தற்போது அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறாா்கள். மற்றொரு கட்சி பல அணிகளாக உடைந்திருக்கிறது. தமிழகத்தின் நலன் மட்டுமின்றி, இந்தியாவின் நலனையும் காக்க இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் பொன்முடி.
விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா் பேசியது:
மத்தியில் இணக்கமான அரசு இருந்தால் தமிழகத்துக்கு இன்னும் பல நலத் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தலாம். தமிழகத்தின் வளா்ச்சியை மத்திய பாஜக அரசு விரும்பவில்லை. மத்தியில் அவா்கள் ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்துக்கு நிதியை வழங்காமல் சதி செய்வாா்கள். திராவிட அரசின் நலத் திட்டங்கள் அனைவரையும் சென்றடைய எனக்கு வாக்களியுங்கள் என்றாா்.
பிரசாரத்தின்ரோசு கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, விழுப்புரம் இரா. லட்சுமணன் எம்எல்ஏவும் பங்கேற்று ஆதரவு திரட்டினா். மாவட்ட ஊராட்சித் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தொகுதிப் பொறுப்பாளா் வன்னியரசு, கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் சச்சிதாநந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.