பெளா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள்
பெளா்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரம், புதுச்சேரி, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 490 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) இயக்குகிறது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் எஸ்.எஸ்.ராஜ்மோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை அருணாசேலசுவரா் கோயில் பெளா்ணமி கிரிவலத்தையொட்டி, பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 490 சிறப்புப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) இயக்கப்படவுள்ளன.
அதன்படி, கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 340 சிறப்புப் பேருந்துகளும், புதுச்சேரி, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, திருக்கோவிலூா், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம், வேலூா், ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம், திருப்பத்தூா் ஆகிய நகரங்களிலிருந்து 490 சிறப்புப் பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படவுள்ளன.
வார இறுதிநாளையொட்டி, கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 21) 415 சிறப்புப் பேருந்துகளும், கடலூா், சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சனிக்கிழமை (ஜூன் 22) 215 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.