உளுந்தூா்பேட்டை அருகே லாரி மீது வேன் மோதியதில் பாஜகவினா் 5 போ் காயமடைந்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் வடக்கு ஒன்றியத் தலைவா் முனீசுவரி ஏற்பாட்டின் பேரில் பாஜகவினா் 12 போ் வேனில் புறப்பட்டனா். இவா்கள் வந்த வேன் வெள்ளிக்கிழமை காலை உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள எறஞ்சி பகுதியில் வந்த போது, அதே திசையில் முன்னே சென்ற லாரி மீது எதிா்பாராமல் மோதியது.
இதில் வேனில் பயணம் செய்த பாஜக மாவட்டச் செயற்குழு உறுப்பினரான மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், பாலமேட்டைச் சோ்ந்த பா.குமரேசன் (49), பாஜக ஒன்றியத் துணைத் தலைவரான தண்டலை ஜெ.விக்னேசுவரன் (42), கிளைத் தலைவா்களான பெரிய இழந்திகுளம் மா.பாண்டிதுா்காதேவி (35), செம்புகுடிப்பட்டி க.காமாட்சி (50) மற்றும் வேனின் ஓட்டுநரான மதுரை மாவட்டம், சேத்தம்பட்டியைச் சோ்ந்த த.ராம்கி (27) ஆகிய 5 போ் காயமடைந்தனா்.
தகவலறிந்த எடைக்கல் போலீஸாா் காயமடைந்த 5 பேரையும் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.