சதுர்த்தி விழா: 1,147 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் 1,147 சிலைகள் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
கடலூர்சதுர்த்தி விழா: 1,147 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் 1,147 சிலைகள் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் 1,147 சிலைகள் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் அனைத்து கோயில்களிலும் உள்ள விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பழங்கள், கொழுக்கட்டை படைக்கப்பட்டு காலை முதலே சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதேபோல் வீடுகளிலும் பக்தர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து படையலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றும் வழிபாடு நடத்தினர்.
விழாவையொட்டி பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டத்தில் 1,147 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஒவ்வொரு
பகுதியிலும் அப்பகுதி இளைஞர்களால் சுமார் 3 அடி முதல் 20 அடி வரையிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலையில் சிறப்புப் பூஜை
நடத்தப்பட்டு கண் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3 வேளைகள் பூஜை நடத்தப்பட்டது.
மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளில் பெரும்பாலானவை புதன்கிழமை (செப்.7) கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில்
கரைக்கப்படும். மேலும் சில சிலைகள் செப்.9ஆம் தேதி கரைக்கப்படுவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விநாயகர் சிலை பாதுகாப்புப் பணியில்
சிலை அமைப்புக் குழுக்கள் மற்றும் போலீஸார் இணைந்து ஈடுபட்டனர்.
சதுர்த்தியை முன்னிட்டு திருப்பாதிரிபுலியூரில் உள்ள பாடலீசுவரர் கோயில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், வரதராஜ பெருமாள் கோயில்,
வில்வநாதீஸ்வரர் கோயில், புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி கோயில்களில் உள்ள விநாயகர், கடலூர் அண்ணாநகரில் உள்ள சர்வசக்தி விநாயகர் கோயில்,
ராஜ விநாயகர், புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோயில், மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர் கோயில், முதுநகர் வெள்ளிப்பிள்ளையார் கோயில், வரசித்தி
விநாயகர், கற்பக விநாயகர் உள்பட 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
வண்ணாரப்பாளையம் சக்தி விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. திருப்பாதிரிபுலியூர் சன்னதிதெருவில் உள்ள வரசித்தி விநாயகர்
கோயிலில் 12 ஆயிரம் வெற்றிலைகளால் வடிவமைக்கப்பட்ட பிள்ளையாருக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
சிதம்பரம் கோயிலில் சிறப்பு ஆராதனை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நர்த்தன விநாயகர், முக்குருணி விநாயகர், கற்பக விநாயகர் சந்நிதிகளில்
பொதுதீட்சிதர்கள் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை செய்தனர்.
மேலும், தெற்குவீதியில் உள்ள ஸ்ரீநரமுகவிநாயகர், மேலரதவீதியில் உள்ள சிறைமீட்ட விநாயகர், வடக்குரதவீதியில் உள்ள திருப்பணி விநாயகர், கீழரதவீதியில் உள்ள அரசமரத்தடி விநாயகர், தேரடிபிள்ளையார்கோயில் தெருவில் உள்ள ராஜகணபதி, போல் நாராயணன்தெருவில் உள்ள ஞானவிநாயகர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சிதம்பரம் நகரில் 19 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர்.
சிதம்பரம் மேலரதவீதி, சத்யாநகர், சுப்பிரமணியர்தெரு மன்மதசாமி கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 5 அடிக்கு மேலான சிலைகள் நிறுவப்பட்டு சதுர்த்தி விழா
கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் காவல் கோட்டத்தில் சிதம்பரம், அண்ணாமலைநகர், கிள்ளை, மருதூர், புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 155 சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
அலைமோதிய கூட்டம்: சதுர்த்தியை முன்னிட்டு சிதம்பரம் மேலரதவீதியில் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருள்கள் வாங்குவதற்காக பக்தர்கள்
திரளானோர் குவிந்தனர்.
இதனால் திங்கள்கிழமை காலை மேலரதவீதியில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு வேறு வழித்தடத்தில் மாற்றப்பட்டது.
நெய்வேலி: சதுர்த்தியை முன்னிட்டு நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இப்பகுதியில் இந்து அமைப்பினர் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர்.
பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. 101 கிலோ எடைகொண்ட லட்டு
தயாரிக்கப்பட்டு விநாயகருக்கு படையலிடப்பட்டது. பின்னர் விநாயகப் பெருமான் வீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம், எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.