கடலூரில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் டிடிவி தினகரனின் ஜோதிடர், நகைக் கடை மேலாளர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக, அதிமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரனின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் கடலூர் திருப்பாதிரிபுலியூர் சரஸ்வதி நகரிலுள்ள சந்திரசேகரன் என்பவரது வீட்டில் வியாழக்கிழமை சோதனை நடைபெற்றது. இதில், சென்னை, கடலூரைச் சேர்ந்த வருமான வரித் துறையினர் 5 பேர் சோதனையில் ஈடுபட்டனர்.
இரவில் சோதனையை முடித்து விட்டு திரும்பிய வருமானவரித் துறையினர், வெள்ளிக்கிழமை காலையில் மீண்டும் தங்களது சோதனையைத் தொடர்ந்தனர். வீட்டின் அருகிலுள்ள அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
இதேபோல, கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசித்து வரும் நகைக் கடையின் கிளை மேலாளர் தென்னரசு வீட்டிலும் சென்னை, புதுவை, கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 8 பேர் கொண்ட வருமான வரித் துறையினர் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமைசோதனை மேற்கொண்டனர்.
இதேபோல, சிதம்பரம் வேணுகோபால்பிள்ளைத் தெருவில் உள்ள பிரபல நகைக் கடையிலும் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றது.