என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு சத்துணவு வழங்கும் விழா, கடலூர் ஓயாஸிஸ் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தத் திட்டத்தை நெய்வேலி மகளிர் மன்றத் தலைவி யோகமாயா ஆச்சார்யா தொடக்கி வைத்தார்.
என்எல்சி இந்தியா நிறுவனம், தனது சமூக பொறுப்புணர்வுப் பணிகளின் கீழ் ஏராளமான நலப் பணிகளைமேற்கொண்டு வருகிறது. தற்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து சத்துணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
அதன்படி, மாற்றுத் திறனாளிகளை பராமரித்து வரும் கடலூர் மாவட்டம், ஓயாஸிஸ் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் பட்ஸ் ஆஃப் ஹெவன் ஆகிய இரு உறைவிடப் பள்ளிகளுக்கு போஷாக் என்ற சத்துணவு வழங்கவுள்ளது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி கடலூர் ஓயாஸிஸ் பள்ளியில் நடைபெற்றது. நெய்வேலி மகளிர் மன்றத் தலைவி யோகமாயா ஆச்சார்யா தலைமை வகித்து திட்டத்தை தொடக்கி வைத்தார்.
மன்றத்தின் புரவலர்கள் கஞ்சன் ராக்கேஷ்குமார், சாந்தி விக்ரமன், சமூகப் பொறுப்புணர்வு துறைப் பொதுமேலாளர் ஜே.பீட்டர் ஜேம்ஸ், துணை பொதுமேலாளர் கே.ரமேஷ் மற்றும் மன்றத்தின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம், கடலூர் உறைவிடத்தில் உள்ள 130 மாற்றுத் திறனாளிகளும், புதுச்சேரியில் உறைவிடப் பள்ளியில் உள்ள 25 சிறப்பு குழந்தைகளும் பயனடைவர்.