கடலூரில் வடிகால் அமைப்பதற்காக ஆக்கிரமிப்பு வீடுகளை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை இடித்து அகற்றினர்.
கடலூர் மாவட்டத்தில் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
எனவே, முறையான வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கைக்கேற்ப சாவடி பகுதியில் வடிகால் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதில் வடிகால் அமைக்கப்பட வேண்டிய கெடிலம் தெருவில் 24 வீடுகள், ஒரு கோயில் ஆகியவை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன.
இந்த இடங்களை காலி செய்யுமாறு வருவாய்த் துறை மூலமாக குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியினர் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி தமிழக தொழில் துறை அமைச்சரிடம் முறையிட்டனர்.
அவரது ஏற்பாட்டின்பேரில் திருமானிக்குழியில் 24 குடும்பத்தினருக்கும் மாற்று இடம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தங்களது குடியிருப்புகளை காலி செய்தனர்.
இதையடுத்து, கடலூர் வட்டாட்சியர் ப.பாலமுருகன் தலைமையில் வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்த வீடுகள், கோயிலை பொக்லைன் இயந்திரம் மூலமாக இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அதேப் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புக் கடைகளையும் அகற்றினர்.
இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் சாவடி பகுதியிலிருந்து கெடிலம் ஆறு வரை வடிகால் அமைக்கப்படுமென வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.