மணல் லாரி சிறைபிடிப்பு
பண்ருட்டி அருகே மணல் லாரியை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி அருகே மணல் லாரியை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி அருகே உள்ள பெரியஎலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. சாத்தமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜோதிலிங்கம், மகாலிங்கம். இவர்கள், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள வடக்குத்து வீராணம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கும், சென்னை மணலியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கும் நாள்தோறும் 2 யூனிட் மணல் விநியோகிக்க வேண்டுமாம். இதற்காக, அரசு அனுமதியுடன் பண்ருட்டி அருகே உள்ள காமாட்சிப்பேட்டை கெடிலம் ஆற்றில் சலித்த மணலை எடுத்து லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர். இந்த லாரியில் கூடுதலாக மணலை ஏற்றிச் சென்று கள்ளச் சந்தையில் விற்பதாகப் புகார் எழுந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை லட்சுமிக்கு சொந்தமான லாரியில் 4 யூனிட் மணல் ஏற்றியுள்ளனர். இதையறிந்த எலந்தம்பட்டு கிராம மக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இவர்களிடம் காடாம்புலியூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், லாரியைப் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநர் திருக்கோவிலூரைச் சேர்ந்த மகாதேவனைக் கைது செய்தனர். மேலும், லாரி உரிமையாளர் லட்சுமி மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.