கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஜே.முத்துக்குமரன் 630 மில்லி கிராம் தங்கத்தில் மெக்கா, மதீனாவை உருவாக்கியுள்ளார்.
சிதம்பரம் விஸ்வநாதன் பிள்ளை தெருவில் வசிப்பவர் ஜே.முத்துக்குமரன் (37).
இவர் 12 வயதிலிருந்தே அவரது தந்தையுடன் சேர்ந்து தங்க நகைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
புகழ்பெற்ற மெக்கா, மதீனா உருவங்களை 630 மில்லி கிராமில் தங்கத்தில் முத்துக்குமரன் தத்ரூபமாக உருவாக்கியுள்ளார்.
மேலும், அல்லாஹ் வார்த்தையை 10 மில்லி கிராம் தங்கத்தில் செய்துள்ளார்.
கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம் என்ற தலைப்பில் 850 மில்லி கிராம் தங்கத்தில் விழிப்புணர்வு உருவங்களைச் செய்தார்.
மேலும், குறைந்த அளவு தங்கத்தில் தூய்மை இந்தியா திட்டம், புதுதில்லி செங்கோட்டை, சிதம்பரம் நடராஜர் கோயில் பொற்சபை, தங்க ஊஞ்சல், தமிழக சட்டப்பேரவை முகப்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவம், தாஜ்மஹால் ஆகியவற்றை உருவாக்கியுள்ளார்.
இவரின் படைப்புத் திறனைப் பாராட்டி அகில இந்திய நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் "பொற்கொல்லர் மாமணி' விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.