வேப்பூர் அருகே வேன் கவிழ்ந்ததில் 23 பேர் வியாழக்கிழமை காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருள். இவர், உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை இறந்தார். இந்த துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பெரும்பாண்டி கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர் மாணிக்கம் தலைமையில் சுமார் 60 பேர் 2 சிறிய வேன்களில் முண்டியம்பாக்கம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
இதில் ஒரு வேன் கடலூர் மாவட்டம், வேப்பூர் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்தது.
இதில் அந்த வேனில் பயணம் செய்த பெரும்பாண்டி கிராமத்தைச் சேர்ந்த த.பரமசிவம் (65), கெங்காசலம் மகன் மாயவேல் (35), சிவசாமி மனைவி ஆண்டாள் (55), அ.தேவராஜன் (51) உள்ளிட்ட 23 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து வேப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.