ஆத்திச்சூடி வடிவில் உருவாக்கப்பட்ட விபத்து தடுப்பு விழிப்புணர்வு வாசகங்களுக்கு மாவட்ட எஸ்பி ப.சரவணன் பாராட்டுத் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட காவல் துறையினர் போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, மங்கலம்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் போக்குவரத்து விழிப்புணர்வை மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், "விபத்தில்லா பயண ஆத்திச்சூடியை' உருவாக்கியுள்ளார். தமிழின் உயிர் எழுத்துகள் "அ'-வில் தொடங்கி "ஒள' என்ற எழுத்தில் முடியும் வகையில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வாசகத்தை எளிதில் புரியும் வகையில் அமைத்துள்ளார். "அளவான வேகம், ஆபத்தில்லாத பயணம்...' என்ற வகையில் இந்த வாசகங்கள் தொடர்கின்றன.
எளிதாக படித்து நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன ஆத்திச்சூடியை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். அவர்களுக்கு காவல்துறையினர் விளக்கமும் அளித்து வருகின்றனர். வித்தியாசமான முறையில், மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள மங்கலம்பேட்டை காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பாராட்டு தெரிவித்தார்.