கொலை வழக்கில் தொடர்புடையவர் தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டார்.
பண்ருட்டி வட்டம், அங்குசெட்டிப்பாளையத்தில் கடந்த ஆக.20-ஆம் தேதி மது அருந்திய நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் (35), கார்த்தி என்ற கிருஷ்ணராஜ் ஆகியோர் உயிரிழந்து கிடந்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸார் முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், ஆக.25-ஆம் தேதி பண்ருட்டி, திருவதிகை, வால்காரத் தெருவைச் சேர்ந்த சரண்ராஜ் (23), உயிரிழந்த மகேஷின் மனைவி கலைச்செல்வி இருவரும் அங்குச்செட்டிப்பாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் ஆஜராகினர். தங்களுக்குள் கூடா நட்பு இருந்ததாகவும், இதற்கு இடையூறாக இருந்த மகேஷை கொலை செய்ய திட்டமிட்டு மதுவில் ஊசி மூலம் விஷம் செலுத்தி அவர்களை குடிக்க வைத்ததாகவும் கூறி சரணடைந்தனர். இவர்களை, கிராம நிர்வாக அலுவலர் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார் இருவரையும் கைதுசெய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
இந்த நிலையில், சரண்ராஜை(படம்) தடுப்புக் காவலில் கைதுசெய்ய மாவட்ட எஸ்பி (பொ)ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். இதன்பேரில், ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டார். அதன்பேரில் சரண்ராஜ் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார்.