நிலம் அபகரிப்பு சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளி திங்கள்கிழமை விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் அருகே உள்ள அன்னவெளியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (47). கடலூர் திருப்பாதிரிபுலியூர் வெள்ளிமோட்டான் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான 2,800 சதுர அடி நிலத்தை விற்பனை செய்திட அதிமுக பிரமுகரை அணுகினாராம்.
அவர், கடந்த 2015-ஆம் ஆண்டில் ரூ.10 லட்சத்துக்கு அந்த இடத்தை தனது உறவினர் பெயருக்கு கிரையம் செய்தாராம். ஆனால், பணத்தை செந்தில்குமாரிடம் அதிமுக பிரமுகர் வழங்கவில்லையாம். பலமுறை கேட்டும் இழுத்தடித்து வந்தாராம்.
எனவே, இந்தப் பிரச்னை தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை செந்தில்குமார் மனு அளிக்க வந்தார். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக குறைதீர் கூட்டம் நடைபெறாததால் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தார். அப்போது, திடீரென செந்தில்குமார் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில், அவர் விஷம் குடித்தது தெரியவந்தது.
அவருக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில், 2-ஆவது பிள்ளையின் கல்லூரி படிப்புக்கு பணம் செலுத்த முடியாமல் இருந்துள்ளார்.
வாட்ச் மெக்கானிக்கான இவர், கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். இடம் விற்ற பணத்தை பிரதானமாக நம்பியுள்ளார். ஆனால், பணம் கிடைக்காத விரக்தியில்
தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.