வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், சாலமேடு பகுதியைச் சேர்ந்த வெண்ணிமலை மகன் மணிகண்டன் (21). இவர், கடந்த ஜூலை 20-ஆம் தேதி பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அப்போது அங்கு தனியாக நடந்துச் சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.25 ஆயிரம் வழிப்பறி செய்தாராம். இதுதொடர்பாக, பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். தொடர் விசாரணையில் மணிகண்டன் மீது பண்ருட்டியில் 5 குற்ற வழக்குகள், புதுச்சேரியில் 3 குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
எனவே, இவரது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தார். அதன்பேரில், அதற்கான உத்தரவை ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வழங்கினார்.
இதனையடுத்து, மணிகண்டனை ஓராண்டுக்கு சிறையில் அடைக்கும் வகையில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகல் மத்திய சிறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.