விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த மணக்கொல்லை கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
மேலும், அந்த கிராமத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு தமிழக அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம், விதவைகளுக்கான ஓய்வூதியம் போன்றவை சரிவர வழங்கப்படவில்லையாம்.
எனவே, கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துத்தருவதோடு, ஓய்வூதியத் திட்டத்தையும் விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் மாவட்ட செயலர் கோகுலகிறிஸ்டீபன் தலைமையில் செவ்வாய்க்கிழமைஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.