கடலூர் அருகே பயிர் விளைச்சல் அறுவடைப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிடப்படும் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சிறப்பு பயிர் விளைச்சல் போட்டியை அறிவித்து நடத்தி வருகிறது.
அதன்படி, கடலூர் வட்டத்துக்கான பயிர் விளைச்சல் அறுவடைப் போட்டியும், வயல் தின விழாவும் கடலூர் வட்டம், வெள்ளப்பாக்கம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
நிகழ்வில் ஜெ.ராஜாராமன் என்ற விவசாயி தனது 1.70 ஹெக்டேர் நிலத்தில் திருந்திய சாகுபடி முறையில், நெல் பயிர்களை நடவு செய்துள்ளார். அந்த வயலில், பிரதமர் விவசாயப் பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நூறு சதவீதம் மான்யம் பெற்று, சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
இதற்கான வயல் விழா ஜெயின் சொட்டுநீர் பாசன நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.
நிகழ்வில் வேளாண் இயக்குநரின் பிரதிநிதியாக அரியலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஷேக் முகமது பங்கேற்றார்.
கடலூர் வேளாண் இணை இயக்குநர் சி.அண்ணாதுரை கலந்து கொண்டு திருந்திய நெல் சாகுபடி சிறப்புப் போட்டிக்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
மேலும், நெல் பயிருக்கு சொட்டுநீர் பாசன முறையை அனைத்து விவசாயிகளும் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
கடலூர் வேளாண் உதவி இயக்குநர் சு.பூவராகன் பயிர் விளைச்சல் போட்டி அறுவடைக்கான முன்னேற்பாடுகளைச் செய்ததுடன், அறுவடை இயந்திரத்தைத் தருவித்து, அறுவடை செய்யும் பணியையும், நெல் எடை இடப்படுவதையும் ஒருங்கிணைப்பு செய்தார்.
சொட்டுநீர் பாசன நிறுவன பகுதி மேலாளர் செந்தில், அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.