திட்டக்குடி அருகே பள்ளி பேருந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் காயமடைந்தார்.
திட்டக்குடி அருகே உள்ள பாசாரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி நிர்வாகப் பேருந்து சனிக்கிழமை வழக்கம்போல மாணவர்களை ஏற்றிக் கொண்டு திட்டக்குடி வெள்ளாற்றுப் பாலத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, முன்னால் கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் டிரெய்லரை முந்திச் செல்ல முயன்றபோது அதன் மீது பேருந்து மோதியது.
இந்த விபத்தில் மாணவர்கள் பேருந்துக்குள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து லேசான காயமடைந்தனர். இதில், துங்கபுரத்தைச் சேர்ந்த 12 வயது மாணவருக்கு காலில் காயம் ஏற்பட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர் நிகழ்விடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.