நெய்வேலியில் பெண்ணிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
நெய்வேலி, 20-ஆவது வட்டம், பசும்புல் தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி காந்திமதி (43). இவர் நெய்வேலி நகரியத்தில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று வருவது வழக்கமாம். அப்போது, நெய்வேலி, 21-ஆவது வட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் செந்தில்குமார் என்பவருன் காந்திமதிக்கு நட்பு ஏற்பட்டது. அப்போது, செந்தில்குமார் டிராவல்ஸ் வைத்து நடத்துவதாக தெரிவித்தாராம்.
இந்த நிலையில் தனக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி காந்திமதியிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் பணத்தை செந்தில்குமார் பெற்றாராம். ஆனால், பணம், நகையை திருப்பித் தரவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸார் வழக்குப் பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர்.