தொடர் திருட்டில் ஈடுபட்டவர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆத்திரிகுப்பத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி ராணி (30). இவர், கடந்த மார்ச் 25- ஆம் தேதி சொரத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது அவரிடம் வழிப்பறி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சேர்ந்த ச.வேலனை (41) (படம்) கைது செய்தனர். இவர் மீது முத்தாண்டிகுப்பம், காடாம்புலியூர், திருப்பாதிரிபுலியூர் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
எனவே, அவரது குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரைத்தார். அதன் பேரில், அதற்கான உத்தரவை ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வழங்கினார்.
இதையடுத்து, வேலன் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.